கருணாநிதி பிறந்தநாள் விழா காஞ்சி மாவட்டத்தில் 7 இடத்தில் கொடியேற்றி கொண்டாட்டம்: உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
7/16/2018 5:27:01 PM
செங்கல்பட்டு: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 7 இடங்களில் கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையில் நடந்த விழாவில், உதயநிதி ஸ்டாலின், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 75 அடி உயர கொடி கம்பத்தில் கொடியேற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த 2 நாட்களாக அனைத்து சமூக வளைதளங்களிலும், நாளிதழ்களிலும் திமுகவில் எந்த பொருப்பிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் எப்படி கட்சி கொடி ஏற்றலாம் என்று விமர்சனம் செய்கின்றனர். திமுகவில் கடைகோடி தொண்டனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். திமுகவில் கடைசி தொண்டன் கூட கழக கொடியேற்ற தகுதி உடையவன். அந்த உரிமையில் தற்போது கொடியேற்றி உள்ளேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்சி விழாக்களை நடத்த வேண்டும், தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபடுவேன்’ என்றார்.
நிகழ்ச்சியில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மறைமலைநகர் நகர செயலாளர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, நகர இளைஞரணி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான டி.கே.கமலக்கண்ணன், ஆல்பர்ட், மறைமலைநகர் நகர 4வது வார்டு பிரமுகரும் தொழிலதிபருமான கே.எஸ்.சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கபெருமாள்கோவில் பஜாரில் நடந்த கொடியேற்று விழாவுக்கு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமையில் விழா நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.ஆர்.சி.ரத்திஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கபெருமாள்கோவில் திருத்தேரியில் நடந்த கொடியேற்று விழாவுக்கு, சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி செயலாளர் கே.பி.ராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கதிரவன், கலைவாணி உள்பட கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு நகர திமுக சார்பில் செங்கல்பட்டு பைபாஸ் சாலையில், நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. இதில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை, கிரீடம் அணிவித்து வீரவாள் பரிசளிக்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் அன்புசெல்வன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், நகர நிர்வாகிகள் திருவள்ளுவன், ராஜி, சந்தோஷ் கண்ணன், மகளிரணி சந்தியா, மீரா, இளைஞரணி அவைத்தலைவர் சென்னாகுப்பம் சிலம்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்போர் ஒன்றியம் தையூர், நாவலூரில் ஒன்றிய செயலாளர் இளையவர்மன் தலைமையிலும், குன்றத்தூர் ஒன்றியம் வஞ்சிவாஞ்சேரியில் படப்பை மனோகரன் தலைமையிலும் கொடியேற்று விழா நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.