காதலிக்கு வேறொருவருடன் திருமணம் மண்டபம் எதிரே தீக்குளித்த சென்னை வாலிபர் சாவு
7/10/2025 3:20:08 PM
வந்தவாசி: காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால், அதிர்ச்சியடைந்த காதலன் மண்டபத்திற்கு வெளியே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்துரு(28). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது சந்துருவுக்கும், ஒரகடம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தார்களாம். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது காதல் சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இவர்களது காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். கடந்த 2ம்தேதி இவர்களது திருமணம் வந்தவாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்த முடிவு செய்தனர். காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த சந்துரு அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 2ம் தேதி அதிகாலை 5 மணியளவில், காதலிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு எதிரே ெசன்றார். அங்கு தான் எடுத்து வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தனக்குதானே தீ வைத்துக்கொண்டாராம். தீ உடல் முழுவதும் பரவியதில் அலறி துடித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், சந்துருவை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சந்துருவின் தந்தை ஆறுமுகம் வந்தவாசி தெற்கு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.