10.53 லட்சம் தங்கம் பறிமுதல்: சென்னை ஆசாமிகள் சிக்கினர்
7/5/2025 3:18:03 PM
திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த முகமது ஜின்னா என்பவரை சோதனையிட்டபோது அவர் உடைமை மற்றும் உடலில் மறைத்து வைத்து ரூ.3.55 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் கொண்ட 3 தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சிராஜுதீன்(65) என்பவரை சோதனையிட்டபோது அவரும் உடைமையில் மறைத்து வைத்து ரூ.3.55 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் கொண்ட 3 தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் மலேசியாவிலிருந்து மலிண்டோ விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகிம்(45) என்பவரை சோதனையிட்டபோது உடைமையில் மறைத்து வைத்து ரூ.3.43 லட்சம் மதிப்புள்ள 112 கிராம் கொண்ட 3 தங்க கட்டிகளை கடத்திவந்தது தெரியவந்தது. 3 பேரிடமிருந்து ரூ.10.53 லட்சம் மதிப்புள்ள 9 தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.