பெட்ரோல் பங்க்கில் தகராறு போலீஸ்காரர் பல் உடைப்பு: 2 பேர் கைது
7/5/2025 3:13:24 PM
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூர்க்க விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(35). திருவாரூரில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவர் நேற்று இரவு பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப, மன்னார்குடி ருக்மணி குளம் அருகே உள்ள பங்க்குக்கு வந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த சேரன்குளத்தை சேர்ந்த அறிவுமதி(19), பாலமுருகன்(19), பரத்(20) ஆகியோர் தங்கள் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தனர். பெட்ரோல் நிரப்பி முடிந்ததும், அவர்கள் மெதுவாக கிளம்பி உள்ளனர். வேகமாக கிளம்பி செல்லுங்கள் என போலீஸ்காரர் பிரபாகரன் ஒருமையில் பேசி உள்ளார். அவர் மாற்று உடையில் இருந்ததால், போலீஸ்காரர் என தெரியாமல் ஏன் ஒருமையில் பேசுகிறீர்கள் என 3 பேரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி 3 பேரும் சேர்ந்து கல் மற்றும் கைகளால் பிரபாகரனை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 பல் உடைந்து விழுந்தது. சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரபாகரன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், மன்னார்குடி போலீசார் அறிவுமதி, பாலமுருகன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பரத்தை தேடி வருகின்றனர்.