பிரதமர் மோடியை சந்திக்க 1350 கி.மீ. நடந்தே சென்ற இளைஞர்
6/18/2018 3:41:37 PM
ஆக்ரா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் இஸ்பேட் பொது மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு இங்கு வந்த பிரதமர் மோடி, அந்த மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும் என்றும், மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதிக் கொடுத்துள்ளார். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அப்பகுதியை சேர்ந்த முக்திகந்த பிஸ்வால் (30) என்ற இளைஞர், டெல்லி சென்று மோடியை சந்தித்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்பினார். இதனையடுத்து ஒடிசாவிலிருந்து முக்திகந்த பிஸ்வால் நடக்க ஆரம்பித்திருக்கிறார். சுமார் 1350 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆக்ராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியை சந்தித்து, அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டாமல் நான் சொந்த ஊருக்கு செல்லமாட்டேன் என கூறியுள்ளார். தனது கிராம மக்களுக்காக நடைபயணம் மேற்கொள்ளும் பிஸ்வால், தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி பயணம் செய்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நமது தேசியக்கொடி என்னை ஊக்கப்படுத்துகிறது. அதனால் என் பயணத்தின் போது அதனை உடன் வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.