பெண் மீது எஸ்.ஐ தாக்குதல்: மாதர் சங்கம் போராட்ட எச்சரிக்கை
6/12/2025 5:00:51 PM
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விட்டுக்கட்டி அன்னதாசன் மனைவி புவனேஸ்வரி(28). திருவாரூர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ தாக்கியதாக கூறி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இந்திய மாதர் சம்மேளன நிர்வாகிகள் பார்த்தனர். பின்னர், மாவட்ட செயலாளர் தமயந்தி கூறியதாவது:
புவனேஸ்வரிக்கும் ஆலத்தம்பாடி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இது குறித்து ஆலிவலம் காவல் நிலையத்தில் கடந்த 18.11.17-ல் மகேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். அப்போது ஆலிவலம் எஸ்ஐ மகாலட்சுமி இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யாமல் புவனேஸ்வரியை விசாரித்துள்ளார். இந்நிலையில் எஸ்ஐ மகாலட்சுமி திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஆலிவலம் எஸ்ஐயாக பணியாற்றும் அன்னை அபிராமியிடம் மகேஸ்வரி மீண்டும் புகார் கொடுத்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புவனேஸ்வரியின் மகள் மிருதளா மற்றும் உடனிருந்த புவனேஸ்வரி ஆகியோரை அழைத்து எஸ்ஐ மகாலட்சுமி, விசாரித்துள்ளார். அப்போது புவனேஸ்வரியை தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள், மனிதஉரிமைஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளோம். வரும் 20ம் தேதிக்குள் எஸ்ஐ மகாலட்சுமி மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் 20ம் தேதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முழுவதும் சாலை மறியல் நடத்தப்படும். இவ்வாறு தமயந்தி கூறினார்.