தூத்துக்குடி துப்பாக்கிசூடு சத்ருகன்சின்கா கண்டனம்
5/25/2018 2:58:59 PM
பாட்னா: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாலிவுட் நடிகரும், பா.ஜ அதிருப்தி தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்கா டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல முனைகளிலிருந்து கண்டனக் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நடிகரும், பா.ஜ அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்கா கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறியிருப்பதாவது:தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வேதனையானது, கண்டனத்துக்கு உரியது. காட்டுமிராண்டித்தனமானது.
நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோமா இல்லை பாசிச ஆட்சியின் கீழ் இருக்கிறோமா? அமைதி வழியில் போராட்டம் நடத்திய ஒன்றுமறியாத அப்பாவி ஏழை மக்களுக்கு எச்சரிக்கை கூட விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டிருக்கிறார்கள். இந்த படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்கள் குரலை எழுப்ப உரிமை உண்டு. பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே பயங்கரவாதி போல நடந்து கொண்டால், பாவம், மக்கள் எங்கே போவார்கள்? காஷ்மீரில் கதுவாவில் நடந்த பலாத்காரம், பெட்ரோல் விலை உயர்வு, தூத்துக்குடியில் நடந்த கருணையற்ற படுகொலைகள் என எதற்கும் கருத்து சொல்லாமல் இருப்பதா? சொல்வன்மை மிக்க சேவகரே (பிரதமர் மோடி), பேசுங்கள். இவ்வாறு சத்ருகன் சின்கா கூறி உள்ளார்.