கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது கோயில் கோயிலாக வலம் வரும் ராகுல்
3/21/2018 2:37:00 PM
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை பதவிக்காலம் மே மாதம் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசும், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.வும் முழுவீச்சில் பிரசாரத்தை தொடங்கி விட்டன. காங்கிரஸ் கட்சி பெல்லாரியில் பிரசாரத்தை தொடங்கியது. இரண்டு கட்டங்களாக 6 மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.3-வது கட்டமாக அவர் நேற்று அங்கு பிரசாரம் மேற்கொண்டார். கடலோர பகுதி மற்றும் மைசூர் சுற்றுவட்டாரங்களில் பிரசாரம் செய்யும் அவர், பொதுக் கூட்டங்கள், தெருமுனை சந்திப்பு, தொண்டர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கர்நாடக மாநில பிரசாரத்தில் குஜராத் பார்முலாவை அவர் பின்பற்ற தொடங்கியுள்ளார். இதற்கு முன்னுதாரணமாக, மங்களூருவில் கோயில், சர்ச், மசூதி என வழிபாட்டு தலங்களை வலம் வரத் தொடங்கியுள்ளார். நேற்று மங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற கோக்கர்நாதேஸ்வரா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன்பின்னர் ரோஸாரியோ சர்ச் சென்று பிரார்த்தனை செய்தார். இரு வழிபாட்டு தலங்களிலும் சென்ற பின்னர் உல்லால் தர்கா சென்று தொழுகையில் ஈடுபட்டார். ராகுல் காந்தியுடன் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். குஜராத் தேர்தல் சமயத்தில் இந்து வாக்காளர்களை கவர கோயில் கோயிலாக சென்ற ராகுல், அதே பாணியை கர்நாடகாவிலும் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.