ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு 2018 சென்னையில் வரும் 26ம் தேதி 4ம் ஆண்டு ஆணழகன் போட்டி
1/11/2025 4:31:02 PM
சென்னை : தமிழ்நாடு மாநில அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க தலைவர் இரா.மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக ‘ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு’ என்ற ஆணழகன் போட்டி, தமிழ்நாடு மாநில அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கத்தின் தலைவரான எனது தலைமையில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டு சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன் 4-வது ஆண்டுக்கான ‘ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு’ போட்டி எனது தலைமையில் வரும் குடியரசு தினத்தன்று(26ம்தேதி) வெள்ளிக்கிழமை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 55 கிலோ, 60 கிலோ, 65 கிலோ, 70 கிலோ, 80 கிலோ, 90 கிலோ, 95 கிலோ, 40 வயதை கடந்த வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்கிய மொத்தம் 11 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் ரூ.5.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25ஆயிரமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.15ஆயிரமும், 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.15ஆயிரமும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களை சேர்த்து அவர்களுக்கு தனியாக ஒரு ஆணழகன் போட்டி நடத்தி அதில் முதலிடம் பிடிக்கும் சாம்பியன் ஆப் சாம்பியன் வீரருக்கு ரூ.5 லட்சம் பரிசும் மற்றும் ‘ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு 2018’ விருதும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த போட்டியில் பரிசுத் தொகையாக மட்டுமே ரூ.10.5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க தலைவரான எனது தலைமையில் சண்முகா டிரான்ஸ்போர்ட் செயல் இயக்குனர் புஷ்பராஜ், பிள்ளையார் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் நிர்வாக இயக்குனர் வி.கோபிலி சங்கர், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க செயலாளர் டி.கே.குருநாதன், துணை தலைவர் ஜிம் ஜெ.பாபு, பொருளாளர் ஸ்ரீனிவாசராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு இரா.மனோகர் கூறியுள்ளார்.