15 வயது தீவிரவாதி காஷ்மீரில் சுட்டுக்கொலை
1/11/2025 4:05:36 PM
ஸ்ரீநகர் : காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த, 15 வயது பள்ளிமாணவன் அனந்தநாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படை வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் குல்காம் பகுதியைச் சேர்ந்த, கவ்கர் ஜான் என்ற பெண்ணின் மகன், பர்ஹான் வானி, 15. அங்குள்ள ஒரு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டியூஷனுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினான். பின்னர் வீடு திரும்பவில்லை. அவனை பெற்றோர் தேடி வந்தனர் இந்நிலையில் அவன் ஹிஸ்புல் முஜாஹீதின் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த அவனது தாய், மிகுந்த கவலையடைந்தார்.
இந்நிலையில், அனந்த நாக் மாவட்டம், பெலிபோரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், பர்ஹான் வானி கொல்லப்பட்டான்; மூன்று பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.