நாணயங்கள் உற்பத்தி நிறுத்தம் : மத்திய அரசு முடிவு
1/11/2025 3:57:42 PM
கொல்கத்தா : அதிகப்படியான தேக்கம் காரணமாக, ரூபாய் நாணயங்களை உற்பத்தி செய்யும் பணியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. ரூ.5, ரூ.10 உள்ளிட்ட நாணயங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் இந்த ஆலைகளில் நாணயங்கள் தயாரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் அதிகளவில் நாணயங்கள் தேக்கம் அடைந்திருப்பதாகவும், உற்பத்தி செய்யும் நாணயங்களை சேமித்து வைப்பதற்கான போதுமான இடவசதி இல்லாததால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாணயங்களை சேமிப்பதற்கு தற்போது இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதால் நாணயங்களை சேமிப்பதற்கு போதுமான இடம் இல்லாததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டதால், அங்கு வேலை செய்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நாணயங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் 1400 பேர் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.