நாளை முதல் பொங்கல் விடுமுறை ஸ்டிரைக்கால் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்
1/11/2025 3:51:44 PM
சென்னை : நாளை முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் நீடிப்பதால், தற்காலிக டிரைவர்களுக்கு பயந்து சிறப்பு பஸ்களில் செல்ல மக்கள் அச்சப்படுவதால் வழக்கமான நாட்களில் செல்லும் பஸ்களை கூட அதிகாரிகளால் இயக்க முடியவில்லை. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் வருகிற சனிக்கிழமை போகி பண்டிகையும், ஞாயிறு அன்று பொங்கல் பண்டிகை, திங்கள் அன்று மாட்டுப் பொங்கல், செவ்வாய் அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனால், தமிழக அரசு நாளை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் செல்லும் சென்னை மக்கள் இன்று மாலை முதல் செல்ல திட்டமிட்டனர். ஆனால், பஸ் ஸ்டிரைக் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. பஸ் ஸ்டிரைக் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் ஸ்டிரைக்கால் தமிழகம் முழுவதும் 20 முதல் 30 சதவீத பஸ்களே இயக்கப்படுகின்றன. அதுவும் தற்காலிக டிரைவர்கள் என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளின் பஸ் டிரைவர்கள், லாரி டிரைவர்களை வைத்து இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அரசு பஸ்களில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சென்னையில் இருந்து வழக்கமாக 2275 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இன்று காலை முதல் 796 சிறப்பு பஸ்களை இயக்க அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் பஸ் டிரைக்கால் பயந்துபோன பொதுமக்கள் யாரும், பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டவில்லை. வழக்கமாக விடுமுறைக்கு முதல் நாள் ஒரு லட்சம் முதல் ஒன்னரை லட்சம் பேர் வரை பதிவு செய்யப்பட்ட பஸ்கள், மற்றும் பதிவு செய்யப்படாத பஸ்களில் செல்வார்கள். ஆனால், இன்று பயணம் செய்ய வெறும் 7 ஆயிரத்து 60 பேர் மட்டுமே முன் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வெறும் 180 பஸ்களை இயக்கினாலே போதுமானது. மேலும் முன்பதிவு இல்லாத பஸ்களை இயக்க தேவை ஏற்படவில்லை. பொதுமக்கள் வெளியூர் செல்ல அரசு பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இதனால், சென்னையில் இருந்து அண்ணாநகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் 3 பேர் டேபிள் போட்டு அமர்ந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் விசாரிக்கக் கூட பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதனால் பஸ் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. நாளை 1980 சிறப்பு பஸ்களும், 13ம் தேதி 2382 சிறப்பு பஸ்களையும் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இன்று நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் மக்கள் வெளியூர் செல்வார்களா என்பது தெரியவரும். அதேநேரத்தில், பஸ்கள் இயக்கப்படாததால், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிறப்பு ரயில்கள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன. முன்பதிவு செய்யப்படாத ரயில் நிலையங்களில் மதியம் முதல் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சிறப்பு ரயில்களில் ஏறிச் செல்கின்றனர். பலர் தொங்கியபடி ஆபத்தான ரயில் பயணங்களை நேற்று மேற்கொண்டனர்.
அதேபோல, விமானங்கள் அனைத்திலும் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன. பல விமானங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் விமானங்களில் கூட டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வழக்கமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் தனியார் பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களை தனியார் நிறுவனங்களும் இயக்குகின்றன. அவர்கள் விமானங்களுக்கு இணையான கட்டணங்களை வசூலிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை
தொழிற்சங்கம் சார்பில் மூத்த வக்கீல் வி.பிரகாஷ் ஆஜராகி ஒரு மெமோ தாக்கல் செய்தார். அந்த மெமோவில் சுமார் 10 கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக போராட்ட காலத்தில் சம்பளத்தை கொடுக்க வேண்டும். இந்த பிரச்னையை தீர்க்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை கேட்ட நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணைப் பார்த்து கேட்டனர். அதற்கு அவர், அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணையை தள்ளி வைத்த நீதிபதிகள் அப்போது அரசு பதில் தரவேண்டும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.