ஆளும்கட்சி தொழிற்சங்கமும் போராட்டத்தில் குதிக்கிறது போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரமடைகிறது
1/10/2025 3:11:47 PM
சென்னை : போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆளும்கட்சி தொழிற்சங்கமும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தை இன்று முற்று கையிட்ட தொழிலாளர்கள், நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு வாரமாகியும் ஸ்டிரைக்கை அரசு முடிவுக்கு கொண்டு வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டிரைக்கை வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். இதுவரை தொமுக, சிஐடியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட பெரிய தொழிற்சங்கங்கள் உட்பட 22 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் 60 முதல் 90 சதவீதம் வரை பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. இதனால் தனியார் பஸ் டிரைவர்கள், பள்ளி, கல்லூரிகளின் பஸ் டிரைவர்கள், லாரி டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் 20 முதல் 30, 40 சதவீத பஸ்களே இயக்கப்படுகின்றன. இதுவரை மாநிலம் முழுவதும் பஸ் டெப்போக்கள் முன்பு தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தி வந்தனர். நேற்று குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர். ஸ்டிரைக்கில் இதுவரை ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்ளாமல் இருந்தனர். இன்று முதல் அவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பஸ் ஊழியர்களின் நியாயமான கோரிககைளை முன் வைத்துதான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது சம்பளத்தில் பிடித்த வைப்பு நிதியை கூட திருப்பித் தராமல் அரசு ஏமாற்றுவதாகவும், இதனால் ஓய்வு பெற்ற பின்னர் தங்களது சேமிப்பு பணத்தை கூட பெற முடியாமல் அவர்கள் தவிப்பதாகவும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் தற்போது குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆளும்கட்சி தொழிற்சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று காலையில் மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை முதல் தொடங்க இருப்பதாக தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், மாநிலம் முழுவதும் ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக 60 முதல் 80 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. ஒரு சில முக்கிய ஊர்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னையில் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில்களிலும் பல லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து கழகத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அரசு இதுவரை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் வரவில்லை.இதற்கிடையில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்பதிவு செய்த பயணிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயங்கும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை சிறப்பு முன்பதிவு தொடங்கப்படவில்லை. இதனால் சிறப்பு பஸ்கள் இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்க போக்குவரத்து துறை அமைச்சர் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியுமா? முடியாதா? என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளனர்.