மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கள்ளக்காதலன் சரமாரி அடித்து கொலை
1/3/2025 3:25:40 PM
ஆலந்தூர் : சென்னை அசோக்நகர், 11-வது தெருவை சேர்ந்தவர் முரளி (32). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷோபனா (28). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஷோபனாவின் நடத்தையில் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இதுகுறித்து தனது மாமனார் ரவி, மைத்துனர் கண்ணன் ஆகியோரிடம் முரளி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர்கள் ஷோபனாவிடம் கேட்டபோது, ‘இனிமேல் இதுபோல் சந்தேகம் வரும் வகையில் நடக்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஷோபனா தனது உடல் பருமனை குறைப்பதற்காக அசோக் நகரில் இருந்து அடையாறு ஆற்று பகுதி வரை தினமும் காலை 5 மணியளவில் நடைபயிற்சி செல்வாராம். நடைபயிற்சி முடித்துவிட்டு லேட்டாக வந்ததால் முரளிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று காலை 6 மணி அளவில் ஷோபனா நடைபயிற்சிக்கு சென்றபோது முரளி அவரை பின்தொடர்ந்துள்ளார். அடையாறு ஆற்றுப் பாலம் சென்றதும் அங்கிருந்து ஒரு வாலிபருடன் பைக்கில் ஏறி மைதானத்துக்கு சென்றுள்ளார். இதன்பிறகும் முரளி பின் தொடர்ந்து சென்று கண்காணித்துள்ளார். அப்போது மறைவான இடத்துக்கு சென்ற ஷோபனாவும் அந்த வாலிபரும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அங்கு கிடந்த ஒரு பெரிய கட்டையை எடுத்துக்கொண்டு சென்று மனைவி ஷோபனாவை சரமாரியாக அடித்துள்ளார். ரத்தவெள்ளத்தில் ஷோபனா மயங்கி விழுந்து துடித்தார். இதை பார்த்ததும் வாலிபர் தப்பியோட முயன்றார். ஆனால் முரளி, அந்த வாலிபரையும் உருட்டுக்கட்டையால் அடித்துள்ளார். வாலிபருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் மயக்கம் அடைந்தார். பின்னர் மைத்துனர் கண்ணனிடம் முரளி பேசி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதன்பிறகு கிண்டி போலீசில் முரளி சரணடைந்தார். இதனிடையே ஷோபனாவின் தந்தை ரவி, மைத்துனர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஷோபனாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை முடிந்து ஷோபனா வீடு திரும்பினார். இதுகுறித்து தகவலறிந்ததும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் மோகன்தாஸ், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை சோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இதையடுத்து வாலிபரின் சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே கிண்டி போலீசில் சரணடைந்த முரளியிடம் நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட நபர் அசோக்நகர், 53-வது தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (31) என்பதும் மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளி என்பதும் தெரியவந்தது. விஸ்வநாதனும் ஷோபனாவும் அசோக்நகர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு வரை படித்தபோது அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. திருமணமான பிறகு விஸ்வநாதன், வியாசர்பாடியில் குடும்பம் நடத்திவந்தார். அவர்கள் இடையே விவாகரத்து ஆனதால், அசோக்நகரில் பெற்றோர் வீட்டில் விஸ்வநாதன் வசித்துள்ளார். அசோக் நகரில் விஸ்வநாதனும் ஷோபனாவும் சந்தித்தபோது தங்களது நட்பை புதுப்பித்தனர். இதுதான் கள்ளக்காதலாக மாறியதுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து, முரளி, அவரது மனைவி ஷோபனா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.