குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் காங்கிரசில் இணைய வேண்டும்
12/31/2017 4:27:22 PM
புதுடெல்லி: குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், காங்கிரசில் இணைய வேண்டும் என ஹார்திக் படேல் அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், 99 இடங்களை கைப்பற்றிய பாஜ 6வது முறையாக ஆட்சி அமைத்தது. 77 இடங்களை பிடித்த காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. குஜராத் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் பதவியேற்ற நிலையில், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை துணை முதல்வராக இருந்த போது நிதின் படேலுக்கு நிதித்துறை, நகர்ப்புற மேம்பாடு, மருத்துவ கல்வி ஆகிய முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை இந்த துறைகளில் ஒன்றுகூட அவருக்கு ஒதுக்காததால், நிதின் படேல் அதிருப்தி அடைந்தார்.
கொடுக்கப்பட்ட இலாகாக்களை பொறுப்பேற்காமல் புறக்கணித்துள்ளார். கட்சிக்கு எதிராக நிதின் படேல் போர்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இதை காங்கிரஸ் சாதகமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க 12 இடங்களே தேவைப்படுவதால், நிதின் படேல் மற்றும் அதிருப்தியில் இருக்கும் பாஜ எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. துணை முதல்வர் நிதின் படேல், காங்கிரசில் இணைய வேண்டும் என படேல் சமூக தலைவர் ஹார்திக் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘படேல் சமூகத்தை பாஜ தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. துணை முதல்வர் நிதின் படேல், 10 எம்எல்ஏக்களுடன் வந்து காங்கிரசில் இணைய வேண்டும். காங்கிரசில் இணைந்தால் உரிய மதிப்பு கொடுக்கப்பட்டு, தகுதியான பதவி வழங்கப்படும்’’ என்றார்.
பாஜவின் நம்பிக்கைக்கு உரியவரான நிதின் படேல், கட்சியை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என்று பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிதின் படேலை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் பாஜ தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.