மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்
12/22/2017 3:27:16 PM
சத்தியமங்கலம்: மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி, ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம் சித்திபேட் கஜேல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாய்நாத் (28), பரத் ரெட்டி (22), சந்தீப் (27), புஜந்தரெட்டி(25), கைலாசம் (24), வெங்கடேஷ் (24), பகீரத் (23), சந்தோஷ்(24), பிரவீன் (22), ஏ.பிரவீன்(24). ஐயப்பனுக்கு மாலை அணிந்திருந்த இவர்கள் 10 பேரும் வேனில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்றுவிட்டு சபரிமலை செல்வதற்காக சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் நேற்றிரவு 10 மணியளவில் சென்றனர். வேனை ஐதராபாத்தை சேர்ந்த டிரைவர் சிவா(24) ஓட்டினார்.
வேன் 2வது கொண்டைஊசி வளைவு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் வேனின் முன்பகுதி சேதமடைந்து டிரைவர் சிவாவின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வேனிலிருந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம்பட்டவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சிவா மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு லேசான காயம் என்பதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.