கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
12/22/2017 3:20:23 PM
சென்னை: கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி தொடங்கியது. அடுத்த சில நாட்களில் வங்க கடலில் அடுத்தடுத்து உருவான 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. பின்னர் 2 வார இடைவெளிக்குப் பிறகு வங்க கடலில் திடீர் புயல் உருவானது. ஓகி என பெயரிடப்பட்ட அந்த புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அதன்பிறகு வங்க கடலில் அமைதியான சூழல் நிலவியது. இதனால் கடந்த ஒரு வாரமாக போதிய மழை பெய்யவில்லை. குறிப்பாக, சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெயில் அடித்து வந்தது. இதற்கிடையில், குமரி கடல் பகுதியில் நேற்று முன்தினம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இதனால் நெல்லை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 3 செ.மீ மழை பதிவானது. இந்த நிலையில், வடகிழக்கு திசையில் இருந்து வீசும் பருவக்காற்றின் சாதகமான போக்கு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இரவு 12 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு பகல் வரை நீடிக்கிறது. நேற்று குளிர்ந்த காற்று வீசியதுடன் அவ்வப்போது லேசான சாரல் விழுந்தது. தாம்பரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்தது.