டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் கடைசி நேரத்தில் நூதன முறையில் பணம் பட்டுவாடா
12/21/2017 3:20:37 PM
சென்னை: ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கடைசி நேரத்தில் நூதன முறையில் பணம் பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10, 20 ரூபாய் நோட்டு கொடுத்து, அந்த சீரியல் நம்பர் சொல்லி ரூ.6 ஆயிரம் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி சார்பாகவும், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் சார்பாகவும் ஏராளமான பணம் விநியோகம் செய்யப்பட்டதாக திமுகவினர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டினர். மேலும், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் சார்பில் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் அனைத்து தெருக்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. வெளியூர் வாகனங்கள் தொகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வங்கிகளில் பணம் எடுப்பவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த தேர்தல் பார்வையாளர்களும் கண்காணிப்பு பணிகளில் தீவிரம் காட்டினர்.
இவ்வளவு சோதனைகளையும் மீறி, சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றச்சாட்டு கடந்த வாரம் எழுந்ததால், தேர்தல் அதிகாரிகளும் அவசர ஆலோசனை நடத்தி, தேர்தல் ரத்து செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக இருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய பிறகும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலையை தொடர்ந்து வருவதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பலருக்கு 10, 20 ரூபாய் நோட்டுக்கள் இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த வாக்காளர்கள் வாக்களித்து விட்டு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்த 10, 20 ரூபாய் நோட்டில் உள்ள சீரியல் நம்பரை சரியாக சொன்னால் அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பணம் விநியோகம் செய்யப்படுகிறது. இதை பாஜ வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கையும் களவுமாக கண்டுபிடித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்றே இதுபோன்ற நூதன மோசடியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பணம் விநியோகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஹவாலா மோசடி கும்பல் தான் இதுபோன்ற ரூபாய் நோட்டு கொடுத்து பணம் மற்றும் தங்கத்தை கடத்தும் தொழிலில் ஈடுபடுவார்கள். அதாவது ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக கிழித்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்துவது வழக்கம். அதேபோன்ற நடைமுறையை ஆர்.கே.நகர் தொகுதியில், 10, 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சீரியல் நம்பரை காட்டி பணம் விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.