ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் பயங்கரம்: சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் படுகாயம்
12/13/2017 4:00:34 PM
சென்னை: ராஜஸ்தானில் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது, அவர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் ரெட்டேரி கடப்பா சாலையில் உள்ள மகாலட்சுமி ஜூவல்லரி மற்றும் அடகு கடையில் கடந்த மாதம் 16ம் தேதி இரவு மர்ம நபர்கள் துளையிட்டு உள்ளே நுழைந்து 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து ெசன்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது, நகைக்கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் ஆய்வு செய்த போது வடமாநில கும்பல் ஒன்று சர்வ சாதாரணமாக நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்றது பதிவாகி இருந்தது. அவர்களின் புகைப்படத்தை பெற்று தீவிரவிசாரணை நடத்தினர். அப்போது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் என தெரியவந்தது.அவர்களை பிடிக்க மதுரவாயல் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
அதைதொடர்ந்து கடந்த மாதம் 18ம் தேதி இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அங்கு உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவியில் பதிவான புகைப்படத்தை காட்டி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குற்றவாளிகளின் சொந்த ஊர் உள்ளிட்ட விபரங்களை ராஜஸ்தான் போலீசாரிடம் இருந்து பெற்றனர். அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். பின்னர் கொள்ளையர்களின் சொந்த ஊரான ராமாவாஸ் கிராமத்திற்கு சென்று அவர்களின் வீடுகளை நோட்டமிட்டு அவர்களைப் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். பின்னர் கொள்ளையர்களை பிடிக்க தலைமை காவலர்கள் குருமூர்த்தி(43), எம்ரோஸ்(42), முதல் நிலை காவலர் சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தானுக்கு அழைத்து அவர்கள் உதவியுடன் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நாத்தூராம்(25), 17 வயது சிறுவன் ஆகியோரின் உறவினர்களான சென்னாராம்(60), சங்கர்லால்(40), ஜனராம்(55), கீதாராம்(49) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்திற்கு தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளின் விபரங்களை போலீசார் வாக்கு மூலமாக பெற்றனர். அதைதொடர்ந்து 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 ேபர் கொடுத்த தகவலின் படி மீண்டும் இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகர் தலைமையிலான தனிப்படையினர், 10 நாட்களுக்கும் மேலாக ராஜஸ்தானில் தங்கியிருந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு சரியான முறையில் சாப்பாடு கூட கிடைக்கவில்லை. தங்குவதற்கும் வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் திரும்பி விட்டனர். அதன்பின்னர் கடந்த 8ம் தேதி கொள்ளையர்கள் குறித்த முக்கிய தகவல்கள் தனிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அன்றே விமானத்தில் ராஜஸ்தான் சென்றனர். பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது பள்ளி மாவட்டம் ஜெய்தாரன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராம்பூர் கலன் கிராமத்தில் உள்ள செங்கல் சூளை அருகே நாத்துராம் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று இரவு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து நாத்துராமை பிடித்தனர். அவரை காரில் ஏற்ற முயன்றபோது நாத்துராம் பெரியபாண்டியை கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்து துப்பாக்கி எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பெரியபாண்டி மற்றும் முனிசேகரை சுட்டுவிட்டு தப்பி முயன்றான். உடனே, தனிப்படை போலீசார் அவனை சுற்றிவளைத்த போது அவரது உறவினர்கள் 15க்கும் மேற்பட்டோர் தனிப்படை போலீசாரை சுற்றிவளைத்து அவர்களை தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார் செய்வது அறியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இன்ஸ்ெபக்டர்கள் ெபரியபாண்டி, முனிசேகரை மீட்டனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். உடனே இதுகுறித்து தனிப்படை போலீசார் ஜெய்தாரன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த ராஜஸ்தான் போலீசார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் முனிசேகரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடலை மீட்டு சென்னைக்கு அனுப்பு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறனர். அதேநேரம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து ராஜஸ்தான் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, ஆவடியில் வசித்து வருகிறார். அவரது மனைவி பானுரேகா(42), ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மூத்த மகன் லயோலா கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டும், 2வது மகன் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கமிஷனர் நேரில் ஆறுதல்
சென்னை மாநகர காவல் ஆணையர் காலை 9.45 மணிக்கு உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்ப நபர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், ‘பெரியபாண்டி திறமையான இன்ஸ்பெக்டர், எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாக செய்து முடிப்பார். பல்வேறு குற்ற வழக்குகளை கண்டுபிடித்துள்ளார். அதனால் தான் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக நாங்கள் விருப்பப்பட்டு பணி அமர்த்தினோம். குற்றவாளிகளை பிடிப்பதில் துணிச்சலானவர். தைரியமாக செயல்படுவார். அவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பு எங்கள் காவல் துறைக்கு பெரும் இழப்பாகும்’’ என்றார்.
மனைவி குமுறல்
பெரியபாண்டியின் மனைவி பானுரேகா கூறும்போது, ‘‘எனது கணவர் டூட்டியில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். வீட்டை பற்றி கவலைப்படமாட்டார். இரவு பகல் என பார்க்காமல் வேலை செய்வார். கொளத்தூர் கொள்ளையர்களை பிடிக்க வெளிமாநிலம் போவதாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நான் தான் அனுப்பி வைத்தேன். பெரிய படையுடன் போங்கள் என்றேன். 7 பேருடன் செல்வதாக கூறினார். ராஜஸ்தானில் இருந்து தினமும் காலையில் போன் செய்து என்னை எழுப்பிவிடுவார். பிள்ளைகளையும் எழுப்பி பள்ளி கல்லூரிகளுக்கு கிளம்ப சொல்லுவார். நேற்று காலை போன் செய்த போது எப்போ வருவீர்கள் என்று கேட்டேன். அப்போது குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், பிடித்து விடுவோம் என்று கூறினார்.
அதற்கு நான் வெளிமாநிலமாக உள்ளது சிரமமாக இருந்தால் வந்துவிடுங்கள் என்று கூறினேன்.
ஆனால் அவர், பிடித்துவிட்டு தான் வருவேன் என்றார். இந்நிலையில் இன்று காலை அவரிடம் இருந்து போன் வராமல் இருந்தது. அதனால் ஏன் இன்னும் போன் செய்யவில்லை என்று நினைத்து கொண்டு இருந்தேன். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக டிவியில் செய்தி வந்தது. இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இல்லாமல் இனி நான் எப்படி இருப்பேன். இவர் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது இவருடன் 100கும் மேற்பட்ட போலீசாரை அனுப்பி வைத்திருந்தால் கொள்ளையர்களை பிடித்து கொண்டு வந்திருப்பார்கள், என் கணவரும் உயிரிழந்து இருக்க மாட்டார்கள்.
உயிருடன் இருந்திருந்தால் இன்னும் ஆயிரம் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்திருப்பார். மக்களுக்கு நல்லது செய்திருப்பார். எப்போதும் வேலை வேலை என்றே இருப்பார். இது போன்ற சம்பவம் இன்றோடு முடியட்டும். வெளிமாநில கொள்ளையர்களை பிடிக்க அதிக போலீசாரை உயர் அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
நெல்லையைச் சேர்ந்தவர்
பெயர்: பெரியபாண்டி(48) பிறப்பு: 04.03.1968, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா, சாலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை செல்வராஜ் (இறந்துவிட்டார்), தாய் ராமதாய். காவல்துறையில் 22.05.2000ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக தேர்வாகினார். அதன்பின்னர் ஆவடி, திருமுல்லைவாயில், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். பின்னர் 21.01.2014ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று அமந்தகரை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி செய்ய தொடங்கினார்.
பின்னர் 10.10.2017ம் ஆண்டு மதுரவாயல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிக்கு வந்துள்ளார். இவருக்கு பானு ரேகா(40) என்ற மனைவி உள்ளார். இவர் திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு மகன்கள் உள்ளனர், ரூபன்(17) லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டும், ராமன்(14) 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.