இலங்கை அட்டூழியத்தை தடுக்காவிட்டால் படகுகளை அரசிடம் ஒப்படைப்போம்: மீனவர்கள் எச்சரிக்ைக
12/13/2017 3:54:36 PM
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைபடகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்களது 5 விசைப்படகுகளை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்து யாழ்பாணம் காவல் துறையில் ஒப்படைத்தனர்.இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும், இது குறித்து கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர்கள் கோட்டைப்பட்டினம் சின்னஅடைக்கலம், ஜெகதாப்பட்டினம் விஜி மற்றும் ராமதேவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மீனவர்கள் நாங்கள் உயிரை பனயம் வைத்து கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறோம். இதில் இயற்கை சீற்றங்கள், படகு பழுது போன்ற காரணங்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம். இதில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தான் அதிகம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சர் எல்லை தாண்டி மீன் பிடித்தால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். அது குறித்து மத்திய மாநில அரசு இன்று வரை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய மாநில அரசுகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 10 தினங்களாக கடலுக்கு செல்லாமல் இருந்து நேற்று தான் கடலுக்கு சென்றோம். சென்றவுடன் மீனவர்கள் சிறைபிடிப்பு நடைபெற்றுள்ளது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே எங்களது விசைப்படகுகளை மத்திய மாநில அரசு திரும்ப பெற்று கொண்டு அதற்காக தொகையை வழங்கிவிட்டால் நாங்கள் மீன் பிடி தொழிலையே நிறுத்திவிடுகிறோம் என கூறி அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருந்தோம். மத்திய அரசுகள் இலங்கை அரசுடன் சுமூக பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்களது விசைப்படகுகளை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம் என கூறினர்.