அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிவிப்பு
12/13/2017 3:54:08 PM
புதுடெல்லி: அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் தயாரிக்கப்படும் என மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த தேர்வை மத்திய இடைநிலைக்கல்வி வாாியம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு தமிழக மாணவர்களும் இந்த தேர்வை எழுதினர். அதற்கு முன்பு தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்தி உள்ளிட்ட சில வடமொழிகளில் நீட் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், தமிழில் கேட்கப்பட்ட வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, மோகன் சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ்முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 2018ம் ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஒரே மாதிரியான வினாத்தாள் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர்.