காங்கிரஸ் தலைவர் என்ற அந்தஸ்துடன் டெல்லி திரும்பிய ராகுலுக்கு உற்சாக வரவேற்பு
12/13/2017 3:52:33 PM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிய ராகுல்காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ராகுல்காந்தி அக்கட்சியின் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான போது ராகுல்காந்தி குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். நேற்று மாலையுடன் அங்கு பிரசாரம் முடிவுக்கு வந்தது.
இதை ெதாடர்ந்து அவர் நேற்று டெல்லி திரும்பினார். துக்ளக் லேனில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த ராகுலுக்கு மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேள தாளங்கள் இசைத்து ஆடிப்பாடி தொண்டர்கள் மகிழ்ந்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி எனவும், மாநிலம் முழுவதும் பாஜவுக்கு எதிரான அலை வீசுவதாகவும் குறிப்பிட்டார்.