ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி வருகை: விவசாயிகள், மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்
12/13/2017 3:51:50 PM
நாகர்கோவில்: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி, நாளை குமரி மாவட்டம் வருகிறார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வீசிய ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் பார்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதே போல் கடந்த வாரம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளையும், மீனவ மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராகுல்காந்தி நாளை (14ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். நாளை காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி வரும், அவர் தூத்தூரில் உள்ள புனித யூதா கல்லூரி மைதானத்தில் அமைக்கப்படும் ஹெலிபேடில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை செல்லும் அவர் பங்கு தந்தைகள், மீனவ பிரதிநிதிகள், மீனவர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் ரப்பர் மற்றும் வாழை விவசாயிகளையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து சேதம் தொடர்பாக கேட்டறிகிறார். ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து கடலோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஹெலிகாப்டர் வந்திறங்கும் தூத்தூர் தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராகுல்காந்தி பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று காலை தூத்தூர் வந்தனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம், தூத்தூரில் இன்று காலை நடைபெற்றது. இதில் டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர், எஸ்.பி. துரை மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாவட்ட போலீசார் குவிக்கப்பட உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று குமரி மாவட்டம் வந்தார். ராகுல்காந்தி செல்லும் கிராமங்களை அவர் பார்வையிட்டார்.