புதுச்சேரியில் இரட்டை ஆட்சி? முதல்வர், அமைச்சர் மோதல்
12/13/2017 3:49:21 PM
புதுச்சேரி: புதுவையில் கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில்சில தினங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சியில் பேசிய நலவழித்துறை அமைச்சர் கந்தசாமி, புதுவையில் கடும் நிதிநெருக்கடி இருப்பதாகவும், அடுத்த மாதம் சம்பளம் போட முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு மறுநாளே மறுப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, அப்படியொரு நிலை புதுச்சேரியில் இல்லை. அரசு ஊழியர்களுக்கு தடையின்றி மாத ஊதியம் வழங்கப்படும் என்றார்.
இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வானதையடுத்து புதுவை கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைமுறையில் இல்லை என்றார். ஆனால் நேற்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.முதல்வர், அமைச்சரின் இந்த மாறுபட்ட கருத்துகளால் புதுச்சேரி காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடி விவகாரத்தில் அமைச்சர் கூறிய கருத்துக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இரட்டை ஆட்சி விவகாரத்தில் முதல்வர் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிர்மறையான கருத்தை அமைச்சர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.