சிறுவன் கொன்று புதைப்பு: தந்தை கைது
12/13/2017 3:47:48 PM
திருவெண்ணைநல்லூர் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த தி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் பாலகுருசாமி (32). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் சென்று அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வந்தார். அங்கு ரத்னா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டார். ரத்னாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அப்பு (7) என்ற மகன் உள்ளார். பாலகுருசாமியை திருமணம் செய்து கொண்டதன் காரணமாக தீவாஷ் (5), தாரா (எ) அம்மு (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாலகுருசாமி, அப்புவை தி.எடையார் கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சிறுவனை அழைத்துக் கொண்டு தொட்டி குடிசை, மலட்டாறு, கோரையாறு பகுதிகளில் சுற்றி திரிந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பாலகுருசாமி மட்டும் தனது வீட்டுக்கு திரும்பியதால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் சிறுவன் அப்பு எங்கே? எனக் கேட்டுள்ளனர்.
இதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். தொடர்ந்து அவரை கட்டாயப்படுத்தி கேட்ட போது, அப்புவை கல்லால் அடித்து கொலை செய்து கோரையாற்றில் புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலகுருசாமியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பாலகுருசாமி, சிறுவன் அப்புவை கொலை செய்து ஆற்றில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டினார். சிறுவன் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.