உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
12/12/2024 3:25:37 PM
திருப்பூர்: சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில், அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் கோர்ட் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த ேவலுசாமி மகன் சங்கர் (22). தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யா(20)வும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப்பின் சங்கர் வீட்டில் கவுசல்யா வசித்தார். பெண்ணின் பெற்றோர் தரப்பில் மிரட்டல் வந்ததால் இருவரும் பாதுகாப்பு கேட்டு குமரலிங்கம் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி சங்கரும், கவுசல்யாவும் உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்துவிட்டு ைககோர்த்தபடி திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியது. இருவரும் உயிர் பிழைக்க ஓடினர். ஆனால் அந்த கும்பல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயம் அடைந்த இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே சங்கர் இறந்தார். கவுசல்யா பல நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். சாதி மறுப்பு திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குபதிந்து, கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி(45), தாய் அன்னலட்சுமி(40), தாய்மாமா பாண்டித்துரை(49), மற்றும் மணிகண்டன்(25), மைக்கேல் (எ) மதன்(25), செல்வக்குமார்(25), ஜெகதீசன்(31), தன்ராஜ்(23), தமிழ் கலைவாணன்(24), கல்லூரி மாணவர் பிரசன்னா(19), மற்றொரு மணிகண்டன்(39) ஆகிய 11 பேரை கைது செய்தனர். உடுமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முதலில் நடந்த வழக்கு விசாரணை, பின்னர் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் 67 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
அரசு தரப்பில், சிறப்பு அரசு வக்கீல் கமிட்டி அமைக்கப்பட்டு 5 அரசு வக்கீல்கள் வாதாடினர். இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், டிசம்பர் 12-ம் தேதி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அலமேலு நடராஜன் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இன்று கோர்ட் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிபதி அலமேலு நடராஜன் காலை 9.30 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் பாண்டித்துரை தவிர மற்றவர்கள் கோவை சிறையில் இருந்து காலை10.20க்கு ஆஜர்படுத்தப்பட்டனர். பாண்டித்துரை திருச்சி சிறையில் இருந்து 11.35 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.
இதையடுத்து, மதியம் 12.10 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்க துவங்கினார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகியோரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படாதால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 8 பேர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
வைரலான வீடியோ
* உடுமலை பேருந்து நிலையம் முன்பு சங்கரையும், கவுசல்யாவையும் கும்பல் அரிவாளால் வெட்டும் காட்சிகள் அங்கிருந்த போக்குவரத்து சிக்னல் கேமராவில் பதிவானது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
* இந்த வழக்கில் 1500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், 121 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பட்டு 67 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. உடுமலை பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்து ஒரு அரிவாள், 4 கத்திகள், ரூ.44 ஆயிரம் ரொக்க பணம், இரு பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை உள்பட, சங்கரின் ரத்தக்கறை படித்த பேண்ட், சட்டை ஆகியவற்றையும் போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
* கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகும் கவுசல்யா தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவர் பெற்றோருடன் சேரவில்லை. அவ்வப்போது திருப்பூர் கோர்ட்டுக்கு வந்து வழக்கு விசாரணையை ஆர்வமுடன் பார்த்து சென்றார். தற்போது அவர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பணியாற்றுகிறார். தீர்ப்பு நாளான இன்று கவுசல்யா கோர்ட்டுக்கு வரவில்லை.