முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்
12/12/2024 3:16:53 PM
சென்னை: அரசு உதவி மருத்துவர் நியமனத்தில் தங்களுக்கான முன்னுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக, முதுநிலை மருத்துவ மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நவம்பர் 20ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 23ம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்திக்க முயன்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்படவே அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவகல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம், முகத்தில் கரியை பூசி போராட்டம், கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் என பல்வேறு வகை போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி சென்னையில் ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை அருகில் மனிதசங்கிலி போராட்டம் நடத்திய டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று ஆணி பலகை மீது நடக்கும் போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் பிரதிநிதிகள் 40 பேர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. அதைத்தொடர்ந்து இன்று முதல் பணிக்கு திரும்புவதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தினோம். சுகாதாரத்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தையின்போது, எங்களின் எல்லா கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். அதில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். நீதிமன்றத்தில் அதுதொடர்பான வழக்கு நடந்து வருவதால் இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தர முடியாது என்று அவர் கூறினார். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.
அதற்காக நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை திரும்ப பெற போவதில்லை, வழக்கு தொடர்ந்து நடைபெறும். வழக்கின் தீர்ப்பு, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம்.