குஜராத்தில் பாஜவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: தலித் தலைவர் மேவானி பேச்சு
12/12/2024 2:57:22 PM
அகமதாபாத்: குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் பாஜ மதவாதத்தை தூண்டிவிடுவதாக அந்த மாநில தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் சட்டமன்றத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் கட்ட தேர்தல் கடந்த 9ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இன்றுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. வட்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் தலித் தலைவர் மேவானி போட்டியிடுகிறார். நேற்று நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இது தொடர்பாக அவர்கள் இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை. தீவிரவாதத்துக்கு துணை போகும் அமைப்புடன் எனக்கு தொடர்பு இருப்பதாக அமித்ஷா குற்றம் சாட்டி வருகிறார். என்மீது சுமத்த வேறு எந்த குற்றச்சாட்டும் கிடைக்காத காரணத்தால் மதவாத குற்றச்சாட்டை பாஜ சுமத்துகிறது. உண்மையில் குஜராத்தில் பாஜ வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதனை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டியது தானே?
மதவாத பிரச்னையை கையில் எடுப்பது ஏன்? குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் கடைசி ஆயுதமாக தங்களை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு எதிராக மதவாத பிரசாரத்தை பாஜ மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மேவானி கூறினார்.