மரத்தில் தூக்கிட்டு எஸ்ஐ தற்கொலை: அதிகாரிகள் தொந்தரவா?
12/4/2025 5:02:47 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (57). இவர், சென்னை காசிமேடு பகுதியில் போக்குவரத்து பிரிவி சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். இவருக்கு, பிரேமா என்ற மனைவியும், ஜெயக்குமார், தனுஷ்குமார் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 4 மாதங்களாக உமாபதிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தினமும் வேலைக்கு சென்ற இவர் சரியாக பணி செய்ய முடியாமல் தவித்துள்ளார். இவர் கேட்டும் அதிகாரிகள் விடுமுறை கொடுக்க மறுத்ததால் மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த சிறப்பு எஸ்ஐ உமாபதி வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமா கொடுத்த புகாரின்பேரில், மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் உமாபதி சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறப்பு எஸ்ஐ தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.