தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு: கேரள முதல்வர் வலியுறுத்தல்
11/7/2025 4:01:46 PM
மதுரை: தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் 2வது அகில இந்திய 3 நாள் மாநாடு மதுரையில் நேற்று நிறைவடைந்தது. பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: ஆர்எஸ்எஸ் அங்கீகாரம் பெற்ற பாரதிய ஜனதா அரசு மத்தியில் இருப்பதால், ஜாதிரீதியிலான ஒடுக்குமுறைகள் நாடு முழுவதும் பரவி வருகின்றன. இந்த ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த பெரியார், இங்கும், கேரள மாநிலம், வைக்கத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே போராட்டங்களை நடத்தியுள்ளார். நாட்டில் தற்போது 18 நிமிடங்களுக்கு ஒரு ஜாதிய ஒடுக்குமுறை நடக்கிறது. கடந்த ஆண்டு கல்யாணி என்ற தலித் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். பசுவின் தோலை உரித்ததற்காக தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பீகார் மாநிலத்தில் தலித் இளைஞர்கள் மீது சிறுநீர் ஊற்றப்பட்டது. வட மாநிலங்களில் அதிகளவில் இந்த தாக்குதல் நடக்கிறது.
டெல்லியில் ஒரு மாதத்தில் துப்புரவு பணியாளர்கள் 13 பேர் இறந்துள்ளனர். நாட்டிலேயே குஜராத்தில்தான், தலித்துகள் மீதான தாக்குதல் அதிகம். இது 163 சதவீதம் அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணங்கள் அடிப்படையில் கடந்த 2012ல் 33 ஆயிரம் பேர் மீதும், 2015ல் 45 ஆயிரம் பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த ஒடுக்குமுறைகள் அதிகரித்து வருவதால், 2016க்கான ஆவண அறிக்கையை இதுவரை வெளியிடாமல் மத்திய அரசு மூடி மறைக்கிறது. இந்திய தண்டனை சட்டத்தின்படி பதிவாகும் 34 சதவீத வழக்குகளில், தலித்கள் மீது மட்டுமே 23 சதவீத வழக்குகள் பதிவாகிறது. பொருளாதாரம், வேலைவாய்ப்பில் தலித்கள் பின்தங்கியுள்ளனர். உரிய ஊதியம் இல்லை. 66 சதவீத தலித்களுக்கு எழுத்தறிவு இல்லை. 41 சதவீதம் பேருக்கு மின் வசதி, 66 சதவீத பேருக்கு கழிப்பிட வசதி, 35 சதவீத பேருக்கு குடிநீர் வசதி இல்லை. பாஜ ஆட்சி அமைந்த பிறகு, மத்திய பட்ஜெட்டில் தலித்களுக்கான வளர்ச்சி நிதி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலித் பெண்கள் வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி கூட ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.