திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்தது மழை 12 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
11/7/2025 3:58:25 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு மழையளவு குறைந்துள்ளது. இதனால், மழைநீர் தேங்கியுள்ள 12 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியபிறகு தினமும் பலத்த மழை பெய்து வந்தது. இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மழைநீர் தேங்கியுள்ள தண்டுரை, திருநின்றவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அத்திவாக்கம், பழைய நாப்பாளையம், கோலடி, ஒரக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிகள், ஆவடி நகராட்சி உயர்நிலை பள்ளி, திருவொற்றியூர் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, புழல் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளி, மணலி செக்டார், கோலடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், கொளத்தூர் புத்தகரம் கல்கி ரங்கநாதன் மெட்ரிக் பள்ளி ஆகிய 12 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கியது.
குறைந்தது மழையளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வடகிழக்கு பருவமழை துவங்கிய பிறகு கடந்த 1ம் தேதி 631 மி.மீட்டர், 2ம் தேதி 212.80 மி.மீட்டர், 3ம் தேதி 718.80 மி.மீட்டர், 4ம் தேதி 434.20 மி.மீட்டர், 5ம் தேதி 425.40 மி.மீட்டர், 6ம் தேதி 531.70 மி.மீட்டர் மழை பதிவானது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 165.50 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இவ்வாறு ஒரு வாரத்தில் மொத்தம் 3,119.40 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): கும்மிடிப்பூண்டி- 36, பொன்னேரி- 28, அம்பத்தூர்- 26, செம்பரம்பாக்கம்- 22.40, திருவள்ளூர்- 9, திருவாலங்காடு- 9, பூண்டி- 8.20, பூந்தமல்லி- 7.50, திருத்தணி- 6, செங்குன்றம்- 5.40, சோழவரம்- 5, தாமரைப்பாக்கம்- 3. மொத்தம் - 165.50 மி.மீட்டர்.