கோயம்பேடு வணிக வளாகத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம்: தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
11/7/2025 3:56:20 PM
சென்னை: சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்காக சோமு உட்பட 12 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. எதற்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்கு பயன்படுத்தாததால், நிலத்தை திருப்பி அளிக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2013ல் நிலத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நிலத்தை திருப்பி அளிக்காததால் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறையின் அப்போதைய செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் விஜய ராஜ்குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
கடந்த அக்டோபர் 12ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 3 வாரங்களில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் விற்ற இடம் இல்லை எனவும் மாற்று இடம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று அரசை எதிர்பார்த்து கொண்டிருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் மக்கள் நீதிதுறையின் மீது நம்பிக்கை இழந்து, வேறு வழியை நாடக்கூடும். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமை செயலாளருக்கு தெரியுமா? என்று கேட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் நாளை(இன்று) தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் வீட்டு வசதி முன்னாள் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தற்போதைய முதன்மை செயலாளர் கிருஷ்ணன், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் விஜய ராஜ்குமார் ஆகியோரும் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதித்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப், முதன்மை செயலாளர் கிருஷ்ணன் உள்பட 4 அதிகாரிகள் இன்று காலை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகள், அட்வகேட் ஜெனரலிடம், இந்த வழக்கு 2013ல் போடப்பட்ட வழக்கு. ஏற்கனவே இருந்த வீட்டுவசதித்துறை செயலாளர் இந்த விஷயத்தை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதனால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், தற்போது மனுதாரர் கூறும் இடத்தில் காலியிடம் இல்லை. மாற்று இடம் தருவது குறித்து முடிவெடுக்கிறோம் என்று பதில் அளித்தார். அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், அதே இடத்தில் காலியிடம் உள்ளது என்றார். இதைகேட்ட நீதிபதிகள் மாற்று இடம் தருவது குறித்து நாளை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.