திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை அதிரடி
11/7/2025 3:05:13 PM
மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், கடந்த 5 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.திருச்சியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ேக.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் திருச்சி தில்லை நகரில் வசித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து நடை பயிற்சி சென்ற போது, கடத்தி கொலை செய்யப்பட்டார். இவரது சடலம் 29ம் தேதி காலை 9 மணியளவில் கல்லணை செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொடூரமாக கொல்லப்பட்டு அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கட்டு கம்பிகளால் கட்டி காட்டில் வீசப்பட்டு கிடந்தது.
தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, முதலில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.விசாரணையில் முன்னேற்றம் ஏதுமில்லாததால், பின்னர் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிபிசிஐடி விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் ராமஜெயத்தின் மனைவி லதா, கடந்த 2014 டிசம்பரில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் ராமஜெயம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர். கடந்த 29.3.2012ல் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிபிசிஐடி விசாரணையிலும் முன்னேற்றம் இல்லை. எனவே வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த மனு கடந்த ஏப்.27ல், நீதிபதி ஏ.எம்.பசீர்அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘கடந்த 27.10.2015ல் இறுதி வாய்ப்பாக 3 மாத கால அவகாசம் அளிப்பதாக இந்த நீதிமன்றம் கூறியது. அதன் பிறகும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. கடந்த ஜன.19ல் நடந்த விசாரணையின் போது கூட எந்த முன்னேற்றமும் இல்லையென நீதிமன்றம் கூறியது’ என்றார். அப்போது நீதிபதி கூறுகையில், ‘சம்பவம் நடந்து5 ஆண்டுகளாகின்றன. இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அறிக்கைகளிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. எந்த முன்னேற்றமும் இல்லை’ என்றார்.அரசு வக்கீல் கூறுகையில், ‘மனுதாரர் தரப்பில் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை. கொலையானவரின் விரோதங்கள் குறித்து விசாரிக்கிறோம். 540க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளோம். இந்த கொலையில் ெளிநாடுகளில் உள்ளவர்களுக்கான தொடர்பு குறித்தும் விசாரிக்கிறோம்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘வெளிநாட்டிலுள்ளவர்களின் தொடர்பு இருந்தால், அதை சிபிஐ விசாரிப்பதுதானே சரியாக இருக்கும்’ என்று கேள்வி எழுப்பினார்.அப்போது, சிபிஐ வக்கீல் ஆஜராகி, ‘ இந்த நிலையில் சிபிஐக்கு மாற்றினால், மீண்டும் முதலில் இருந்துதான் விசாரிக்க வேண்டும். ேமலும் காலதாமதம் ஏற்படும்’ என்றார்.அப்போது மனுதாரர் வக்கீல், ‘போதுமான ஆட்கள் இல்லாத நிலையிலும் பல வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வியாபம் ஊழல் வழக்கு, ராஜிவ்காந்தி கொலை வழக்கு, டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு போன்றவற்றில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அதிகாரிகள் ஒத்துழைப்பு தந்துள்ளனர். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்றார்.
இதையடுத்து மனு மீது தீர்ப்பளிப்பதாக கூறிய நீதிபதி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஏ.எம்.பசீர் அகமது முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. ‘ஏற்கனவே பலமுறை கால அவகாசம் கொடுத்தும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று சிபிசிஐடிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுகிறது என அதிரடியாக உத்தரவிட்டார்.