அதிமுகவை குடும்ப சொத்தாக யாரும் ஆக்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
11/6/2025 4:50:49 PM
பண்ருட்டி: அதிமுகவை குடும்ப சொத்தாக யாரும் ஆக்க முடியாது என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.பண்ருட்டியில் அவர் அளித்த பேட்டி: கட்சியும், ஆட்சியும் இருக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். துணை பொதுச்செயலாளராக தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவாகும். தேர்தல் கமிஷன் இரட்டை இலையை எடப்பாடி அணிக்கே அளிக்கும். அதிமுக ஒரு பெரிய இயக்கமாகும். இதனை குடும்ப சொத்தாக யாரும் ஆக்க முடியாது. இக்கட்சியில் யார் வேண்டுமெனாலும், உழைக்கலாம், பதவி பெறலாம். நடிகர்கள் தற்போது அரசியல் சம்பந்தமான கருத்துக்களை கூறுவது அவர்களது கருத்தாகும். ஏனெனில் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவது மிகுந்த சிரமமாகும்.
பாஜ கருத்துக்களை அறிய வேண்டுமெனில் பிரதமர்தான் பதில் கூறவேண்டும். இடையில் மற்றவர்கள் யாரும் கூறினாலும் அதனை ஏற்க முடியாது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தற்போது வலுவிழந்த நிலையில் உள்ளன. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் போது எல்லாம் என்னிடம் ஆலோசனை கேட்டு செய்வார். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஆலோசனை கூற முடியவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. தற்ேபாதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் நிலையை குறித்து நீதிமன்றங்கள் அதிகமாக தலையிடுவதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.