5 கோடி கோயில் சிலை கொள்ளை சென்னை, காஞ்சியை சேர்ந்த 2 பேர் அதிரடி கைது
11/6/2025 4:48:48 PM
திருச்சி: நெல்லை மாவட்டம் சிவன் கோயிலில் ரூ.5 கோடி மதிப்பிலான சிலை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அத்தாளநல்லூர் கிராமத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 1,600 ஆண்டு பழமையான மூன்றீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஏராளமான பஞ்சலோக திருமேனிகளும், தொன்மையான கற்சிலைகளும் இருந்தன. கோயிலின் வெளிபிரகார வாயிலில் இருந்த பழமை வாய்ந்த 2 துவாரபாலகர் கற்சிலைகளை 1994ம் ஆண்டு டிசம்பரில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். நெல்லை மாவட்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஆனால் சிலைகளை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு போலீஸ்் நிலையங்களில் 133 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க வசதியாக திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில் புதிதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், 23 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கொள்ளைபோன 2 கற்சிலைகளும், குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். திருடப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.நெல்லை மாவட்டம் அத்தாளநல்லூர் ஊர் முக்கியஸ்தர்கள் அந்த 2 சிலைகளை இணையதளம் வாயிலாக பார்த்து அடையாளம் காட்டினர். கொள்ளை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தை சேர்ந்த லெச்சு (எ) லெட்சுமி நரசிம்மன்(53), இவரது கூட்டாளிகளான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஊமைத்துரை(68), தஞ்சையை சேர்ந்த அண்ணாதுரை(59) ஆகிய 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட 2 சிலைகளையும் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் மூலம் ரூ.4.98 கோடிக்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் நேற்று போலீசார் கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 2 சிலைகளையும் தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக கூடுதல் டிஎஸ்பி இளங்கோ, டிஎஸ்பி கனகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ்சந்திரகபூரிடம் ஐஜி.பொன்மாணிக்கவேல் சில நாட்களுக்கு முன்பு பல மணி நேரம் விசாரணை நடத்தினார். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் 23 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் கொள்ளை போன சிலைகள் பற்றி தெரியவந்தது.