அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைத்த அதிமுகபிரமுகரின் இறால் பண்ணை அகற்றம்: ஆர்ஐக்கு மெமோ, விஏஓ சஸ்பெண்ட்
11/6/2025 4:07:07 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம் உள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பை இங்கு தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றம் செய்யப்படுகிறது. மாவட்டத்திலேயே சிறப்பாக செயல்படும் உரக்கிடங்கு என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தையொட்டி மாமல்லபுரம் நகர ஆளுங்கட்சி முக்கிய பிரமுகருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் மாமல்லபுரம் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் செல்லும் வெள்ளநீர் பக்கிங்காம் கால்வாயில் சென்று சேருகிறது. இக்கால்வாயை ஆக்கிரமித்து இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் வெள்ளநீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லாமல் திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்கில் புகுந்துவிட்டது. சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் அங்கு தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், உரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன.
வெள்ளநீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும்போது ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கரையை உயர்த்தி அமைத்துள்ளதாகவும், இதனால் வெள்ளநீர் உரக்கிடங்கில் புகுந்ததாகவும் வந்த தகவலையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் அங்கு வந்து மோட்டார் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றினர். ஐஏஎஸ் அதிகாரி சிவசண்முகராஜா, திட்ட இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் நேற்று இறால் பண்ணையை நேரில் பார்வையிட்டனர். அப்போது அவர்கள், அனுமதியின்றி இயங்கிய இறால் பண்ணையை அழிக்க உத்தரவிட்டனர். பக்கிங்காம் கால்வாயில் வெள்ளநீர் சென்றடையும் வகையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இறால் பண்ணை அமைத்ததை கண்டு கொள்ளாமல் இருந்த வருவாய் அதிகாரிக்கு மெமோ வழங்கினர். விஏஓவை சஸ்பெண்ட் செய்தனர்.இதையடுத்து, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் சாந்தி முன்னிலையில் வருவாய் துறை அதிகாரிகள் இன்று காலை வந்து இறால் பண்ணை ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.