இரட்டை இலை சின்னம் யாருக்கு? நாளை தீர்ப்பு?
10/29/2017 2:26:21 PM
சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நாளை மீண்டும் நடக்கிறது. இதில் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பது முடிவாகும் என்று கூறப்படுகிறது. விசாரணையில் பங்கேற்பதற்காக இபிஎஸ்-ஓபிஎஸ், தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என்று இரண்டு அணியாக பிரிந்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டனர். இதனால், அதிமுக பெயர் மற்றும் கட்சியின் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதைத் தொடர்ந்து பிரிந்து இருந்த இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இந்த இணைப்பு செல்லாது என்று டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில் இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பாக அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தீவிரமாக களத்தில் இறங்கின. இபிஎஸ்-ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் அணியினர் போட்டி போட்டு பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றிய இறுதி முடிவு செய்வது குறித்து இரு அணிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்ட விசாரணை கடந்த 6ம் தேதி இந்திய தேர்தல் அதிகாரி எ.கே.ஜோதி தலைமையில் தொடங்கியது. இரண்டாம் கட்ட விசாரணை 13ம் தேதி நடந்தது.
3ம் கட்ட விசாரணை கடந்த 23ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணி சார்பில் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்கறிஞர் சேதுராமன் ஆஜராகினர். அதேபோல் டிடிவி தினகரன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதில் இபிஎஸ்-ஓபிஎஸ் வழக்கறிஞர்கள்” அதிமுகவின் பொது குழு, செயற்குழு, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட 95 சதவிதத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் எங்களிடன் தான் உள்ளனர். எங்களுக்கு தான் பெரும்பான்மை அதிகம் உள்ளது. அதிமுகவை வழிநடத்தவோ அதில் உள்ள உறுப்பினர்களை கட்டுப்படுத்தவோ தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே, இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்” என்றனர்.
தினகரன் தரப்பினர்” எங்களது அணி சார்பில் அதிகப்படியான உறுப்பினர்கள் எங்களுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். அதனை அடிப்படையாக கொண்டு எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று விவாதிட்டனர். இருதரப்பிலும் காரசார விவாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணை நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் டெல்லியில் உள்ள மைத்ரேயன் எம்பியும் விசாரணையில் பங்கேற்கிறார்.
மேலும் தமிழக அமைச்சர்களும் இன்று இரவு டெல்லி செல்கின்றனர். இதே போல, தினகரன் அணியினரும் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். மதுரை ஐகோர்ட் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த கெடுவுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், நாளை நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற போவது யார் என்ற பரபரப்பு அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அந்த அணியே உண்மையான அதிமுகவாக கருதப்படும். அவர்களுக்கே அதிமுக பெயர், கட்சி அலுவலகத்தை பயன்படுத்தும் உரிமை கிடைக்கும். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் எடப்பாடி, ஓ.பி.எஸ்.தரப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்னை தீர்ந்த பிறகு தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியையும் அறிவிக்க வாய்ப்புள்ளது.