செய்த தவறுக்கு பிராயசித்தமாக யோகியின் தாஜ்மகால் பயணம் இந்திய கம்யூனிஸ்ட் தாக்கு
10/27/2017 4:12:26 PM
புதுடெல்லி: முதல்வர் யோகியின் தாஜ்மகால் பயணம் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையிலாக அமைந்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிண்டல் அடித்துள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தாஜ்மகால் சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியை துடைப்பத்தால் சுத்தம் செய்தார். முன்னதாக பாஜ தலைவர்கள் பலரும் தாஜ்மகால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் நேற்று யோகியின் தாஜ்மகால் பயணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதுல் அஞ்சான் கூறுகையில், 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சின்னமான தாஜ்மகால் குறித்து பாஜ தலைவர்கள் கூறியதை நினைத்து பார்க்க வேண்டும். அதே போல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேட்டியளித்த யோகி கூறுகையில், உத்தரபிரதேசத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் தாஜ்மகால் பெயரை மாற்றுவோம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது தாஜ்மகால் சென்றதன் மூலம் தனது தவறை சரி செய்து கொண்டார்.
அவரது தாஜ்மகால் பயணம் தவறுக்காக பிராயசித்தம் தேடும் யாத்திரையாக அமைந்துள்ளது. தாஜ்மகாலின் உண்மையான வரலாறு குறித்து வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் நூறாண்டுகளுக்கு முன்பே மிகவும் தெளிவாக எழுதி சென்றுள்ளனர். அப்படி இருந்தும் பாஜவின் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜ எம்பிக்கள், அமைச்சர்கள் அனைவரும் தாஜ்மகால் ஒரு இந்து கோயில் தான் என்ற புரளியை தொடர்ந்து பேசி வருகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்லும் தாஜ்மகாலை முதல்வர் யோகி சென்று பார்வையிட்டதன் மூலம் அவர் பிராயசித்தம் தேடிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்