வயல் வழியாக அமைச்சர் வாகனம் சென்றதால் சேதம்: விவசாயிக்கு 4 ஆயிரம் வழங்கிய பாஜ அமைச்சர்
10/27/2017 4:10:55 PM
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உழுது விதைக்கப்பட்ட வயல் வழியாக பாஜ அமைச்சரின் வாகனங்கள் சென்றதால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கோரிய விவசாயிக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மை நாட்களாக அங்கு பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு ஆக்ரா அருகே கிராமத்தில் பாஜ அமைச்சர் ஜெய் குமார் சிங் மற்றும் அவரை தொடர்ந்து வந்த வாகனங்கள் வயல் வழியாக சென்றதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்ரா அருகே உள்ள ஜலாவுன் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் அண்மையில் வயலை உழுது பயிர் செய்வதற்காக விதைகளை தூவியிருந்தார். கடந்த புதன்கிழமை அமைச்சர் ஜெய்குமார் சிங் மற்றும் அவரை பின்தொடர்ந்து வந்த ஏராளமான பாதுகாப்பு வாகனங்கள் ஆதரவாளர்கள் வாகனங்கள் உழுது விதைக்கப்பட்ட வயல் வெளியின் மீது சீறி பாய்ந்து சென்றுள்ளன. இதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
அடுத்தடுத்து வாகனங்கள் சென்றதால் தனது வயலில் தூவப்பட் விதைகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். எனவே தனக்கு பயிர் இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனே தகவல் அறிந்த அமைச்சர் உடனடியாக விவசாயியை அழைத்து அவரது ரூ.4 ஆயிரத்தை சட்டை பையில் திணித்தார். இதை கண்டு விவசாயி மேலும் அதிர்ச்சி அடைந்தார். தற்போது இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கடந்த ஜூலை 11ம் தேதி தனது முதல் பட்ஜெட்டின் போது முதல்வர் யோகி அறிவித்திருந்தார். அதில் விவசாயி ஒருவருக்கு ரூ.1 கடன் தள்ளுபடி செய்ததாக தகவல் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் யோகி அரசு அக்கறை காட்டி வருவதாக மாநில நிதி அமைச்சர் ராஜேஸ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.