டி.பி.சத்திரம் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்றவர்கள் கைது
10/27/2017 4:05:09 PM
கீழ்ப்பாக்கம்: சென்னையில் அண்ணாநகர், அயனாவரம், அமைந்தகரை, டி.பி.சத்திரம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் கமிஷனர் சாரங்கன், கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் மேற்பார்வையில், டி.பி.சத்திரம் பிரதான சாலை பகுதிகளில் நேற்று மாலை தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது 5-வது குறுக்கு தெருவில் ஒருவர் பைக்கில் வந்து, ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்தார். அந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (45) என்பதும், இவர் சென்னை நகரில் ஒரு நம்பர் லாட்டரியின் மொத்த வியாபாரியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவர் பைக்கில் சென்னை நகரை சுற்றி வந்து, சில்லறை வியாபாரிகளிடம் லாட்டரி விற்பனை செய்து வருவது தெரிந்தது.
இதேபோல், டி.பி.சத்திரத்தில் அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் கண்காணித்தனர். குடியிருப்பில் இருந்து கஞ்சா பொட்டலங்களுடன் வெளியேறிய சந்திரசேகரன்(23) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சிமெட்ரி ரோடு ‘பி’ பிளாக்கை சேர்ந்த தனராஜ்(35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்நிலையில், சென்னை நகர் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய லோகநாதன் (30) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.