2 போலி டாக்டர்கள் கைது
10/27/2017 4:03:22 PM
செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, சூணாம்பேடு அடுத்த கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (86). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்பகுதி மக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.இதேபோல், கடுக்கலூர் கிராமத்தை அடுத்த நுகும்பல் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (44). இவர் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, அக்கிராம மக்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் போலி டாக்டர்கள் நடமாட்டம் குறித்து, அனைத்து பகுதிகளிலும் அதிரடி ஆய்வு நடத்தி, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட அரசு நல மருத்துவமனை இணை இயக்குநர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று சூணாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடுக்கலூர், நுகும்பல் கிராமத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில், 2 போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து, அப்பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயராமன், மூர்த்தி ஆகிய இருவரையும் சூணாம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.