டிவியில் அதிக சத்தம் வைத்த தகராறு: சினிமா உதவி இயக்குநர் கொலை
10/27/2017 4:01:52 PM
பூந்தமல்லி: திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் அகில் கண்ணன் (39), சினிமா உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார். இவர், அண்ணாத்துரை என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அகில் கண்ணன், சென்னை வளசரவாக்கம் கைக்கான்குப்பம் வஉசி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவருடன் மற்றொரு சினிமா உதவி இயக்குநர் கார்த்திகேயன் (32) உட்பட 6 பேர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு அகில் கண்ணன் வீட்டில் தூங்கியுள்ளார். அப்போது கார்த்திகேயன் டிவி பார்த்துள்ளார். டிவி சத்தம் அதிகமாக இருப்பதால், தூங்குவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி, டிவி சத்தத்தை குறைக்குமாறு அகில் கண்ணன் கூறியுள்ளார். இதை பொருட்படுத்தாமல் சத்தத்தை குறைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அகில் கண்ணன், டிவியை ஆப் செய்துவிட்டு தூங்க சென்றுள்ளார். ஆனாலும் மீண்டும் டிவியை ஆன் செய்து அதிக சத்தமாக வைத்து கார்த்திகேயன் பார்த்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அகில் கண்ணன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அகில் கண்ணனை, கார்த்திகேயன் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
கீழே விழுந்ததில் அகில் கண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து கார்த்திகேயன், நண்பர்களுடன் அகில் கண்ணனை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது, தலையை ஸ்கேன் செய்யும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் பணம் இல்லாததால் அகில் கண்ணனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர், அனைவரும் தூங்கியுள்ளனர். இன்று காலை எழுந்து பார்த்துபோது அகில் கண்ணன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் பயந்துபோன கார்த்திகேயன், கே.கே.நகர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார், வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார், அகில் கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர் அவருடன் தங்கியிருந்த மேலும் 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சினிமா உதவி இயக்குனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.