போலி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
10/27/2017 3:59:32 PM
காஞ்சிபுரம்: செங்கல்பட்டில் போலி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது நண்பர்கள் நாகராஜ், நாகராஜா. இவர்கள், செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு “வின்னர் அக்ரி வேல்டு” என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தனர்.அதில், 5 ஆண்டுகள் வரை தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை வழங்கப்படுமென அறிவித்திருந்தனர். இதை நம்பி 200க்கும் மேற்பட்டோர் 500, 1000, 2000 என மாதாமாதம் செலுத்தியுள்ளனர். அந்தவகையில் பல லட்ச ரூபாய் கட்டியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நிறுவனத்தை திடீரென மூடிவிட்டு இருவரும் தலைமறைவானார்கள். இதனால் பணம் செலுத்தி வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நாகராஜை போலீசார் கைது செய்து விசாரித்தனர். தலைமறைவாக உள்ள நாகராஜாவை தேடி வருகின்றனர். யார், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி ஏற்றியுள்ளனர் என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.