கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் கருகி பலி
10/13/2017 3:39:13 PM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நின்ற கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததால் தீப்பற்றியது. இதில் டிரைவர் பரிதாபமாக கருகி பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை ரோட்டைச் சேர்ந்தவர் லூர்துசாமி(62). இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்டெய்னர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று துறைமுகம் கேம்ப் 1 பகுதியில் இருந்து லாரியில் கன்டெய்னரை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் - நெல்லை ரோட்டில் உள்ள தனியார் குடோனுக்கு சென்று கொண்டிருந்தார். சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் லாரியை லூர்துசாமி நிறுத்தினார். அப்பகுதியில் தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பியில் கன்டெய்னர் உரசியபடி நின்றுள்ளது.
இதனை கவனிக்காத லூர்துசாமி கீழே இறங்கி சென்று கை, கால்களை கழுவி விட்டு மீண்டும் லாரியில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் பாய்ந்த ஹைவோல்டேஜ் மின்சாரம் டிரைவர் லூர்துசாமி மீது பாய்ந்துள்ளது. இதில் லாரியின் டயர் மற்றும் பக்கவாட்டு பகுதி எரிந்ததால் லூர்துசாமி உடலிலும் தீப்பற்றி கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். லூர்துசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.