தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் மதுபான விலை கிடுகிடு உயர்வு: குவார்ட்டருக்கு ₹12, ஃபுல் பாட்டிலுக்கு ₹48 வரை உயர்வு
10/13/2017 3:26:44 PM
சென்னை: தமிழகத்தில் மதுபானங்கள் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு புல் பாட்டிலுக்கு ரூ.48 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.3600 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும். மது விலை ஏற்றத்தினால், மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 6823 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தேர்தல் வாக்குறுதிக்காக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதைதொடர்ந்து, தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் 500 கடைகளை மூடினார். இதற்கிடையில், நெடுஞ்சாலைகளில் மது கடைகளை மூடக்கோரி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய, மாநில நெருஞ்சாலை ஓரம் உள்ள 3,321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 3,500 ஆக குறைந்தது. இதற்கிடையில், மூடப்பட்ட கடைகளுக்கு பதில் தமிழக அரசு புதிய இடங்களில் சுமார் 1000 மாற்றுக் கடைகளை திறந்தது. தமிழக அரசு வருவாயில் டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகம். டாஸ்மாக் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.65 முதல் ரூ.70 கோடி வரை அரசுக்கு வருவாய் வந்தது. ஆண்டுக்கு ரூ.24000 கோடி வருவாய் கிடைத்தது. அதேசமயம், 50 சதவீதம் கடைகள் மூடப்பட்டதால் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் டாஸ்மாக் வருவாய் பெரிதும் குறைந்தது. இருப்பினும் ஜூலை மாதம் வழக்கம்போல் டாஸ்மாக் விற்பனை அதிகரித்தது. அதன்படி, கடைகள் அடைப்பதற்கு முன்பு கொள்முதல் செய்ததைபோல், மாதம் 14 லட்சம் மதுபான பெட்டிகள் அரசு கொள்முதல் செய்து வருகிறது.
இருப்பினும் டாஸ்மாக் வருவாயை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் மது விலையை உயர்த்துவது என அமைச்சரவை முடிவு செய்தது. புதுச்சேரி மாநிலத்திலும் சமீபத்தில் மதுபானம் விலை உயர்த்தப்பட்டது. அதேசமயம், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுப்படி சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. எனவே, சம்பள உயர்வால் ஏற்படும் நிதிநெருக்கடியை சமாளிக்க அரசு மது விலையை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குவார்ட்டருக்கு அதிகபட்சம் ரூ.12ம், புல் பாட்டிலுக்கு அதிக பட்சம் ரூ.48ம் அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு குறைந்தது ரூ.3ஆயிரத்து 600 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.