திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்
10/8/2025 5:12:42 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுலில் இருந்து விலகிய மூத்த தலைவர் முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு திரிணாமுலுக்கும் பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையொட்டி திரிணாமுல் தலைவர்கள் பலர் மீதும் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சிபிஐ பதிவு செய்து கைது செய்தது. மம்தாவின் நெருக்கமான தலைவராக இருந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் ராயை பாஜ குறிவைத்தது. இதையடுத்து அவருக்கு பாஜ மேலிட தலைவர்களுடன் ரகசிய தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி மம்தா உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் பாஜவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜ தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரையும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. துர்கா பூஜை முடிந்த பிறகு திரிணாமுலின் ராஜ்யசபா எம்பி பதவியையும் முகுல் ராய் ராஜினாமா செய்கிறார். இதற்கிடையில் டெல்லியில் பாஜ உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை முகுல் ராய் சந்தித்து பேசினார். அண்மை காலமாக பாஜ மீது கரிசனத்துடன் முகுல் ராய் பேச்சு காரணமாக அவர் பாஜவில் இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்கள் வர உள்ளன. எனவே அதில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் தனிக்கட்சி தொடங்க முகுல் ராய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து நேற்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் அனைத்து இடங்களிலும் எனது ஆதரவாளர்களை போட்டியிட செய்வேன். திரிணாமுலின் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் தனது ராஜ்யசபா எம்பி பதவியை முகுல் ராய் ராஜினாமா செய்து கடிதத்தை கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.