பினாமி சொத்து விவகாரம் சசிகலா குடும்ப பஞ்சாயத்து
10/8/2025 5:08:53 PM
சென்னை: ஐந்து நாட்கள் பரோலில் வெளிவந்துள்ள சசிகலா, தான் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசித்தார். பினாமி சொத்துபிரச்னை பற்றியும் யாரெல்லாம் அந்த சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்தும் உறவினர்களுடன் சசிகலா கலந்தாலோசித்தார்.சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவிலும், கட்சியிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஒன்றாக இணைந்து தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இதையடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கோரி வருகின்றன.
இந்நிலையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சசிகலா கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கல்லீரல், சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தன்னுடைய கணவர் நடராஜனை பார்க்க வேண்டும், உடன் இருந்து கவனித்துகொள்ள வேண்டும் என சசிகலா பரோல் கோர விரும்பினார். பின்னர் கர்நாடகா அதிமுக செயலாளர் புகழேந்தி தலைமையில் வக்கீல்கள் சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கோரி பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர். போதிய ஆவணங்கள் இல்லை என கூறியதால் இரண்டாவது முறையாக சசிகலா அணியினர் விண்ணப்பித்தனர். இதையடுத்து மனுவை ஏற்றுக்கொண்ட சிறை நிர்வாகம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் அனுப்பியது.
இதையடுத்து கடும் நிபந்தனைகளுக்கு நடுவே சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் கொடுக்கப்பட்டது. பின்னர் சசிகலா தி.நகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் வீட்டில் தங்கினார். நேற்றைய தினம் சிகிச்சை பெற கூடிய கணவர் நடராஜனை பார்த்துவிட்டு மாலை 4 மணியளவில் சசிகலா தி.நகர் இல்லத்திற்கு திரும்பினார். பின்னர், இரவு முழுவதும் தன்னுடைய உறவினர்களிடம் குடும்ப பிரச்னைகள் பற்றியும், பினாமி சொத்துகளை யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தவர் சசிகலா. அதுபோல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவிற்கே சொத்துக்கள் விபரமும், யார் யார் எதை நிர்வகித்து வருகிறார்கள் என்பது பற்றிய முழு விவரமும் தெரியும். ஆனால், சிறை தண்டனை பெற்று சசிகலா சிறை சென்ற பிறகு பணம் கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் கடும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் சசிகலா தன்னுடைய உறவினர்கள் ஜெய் ஆனந்த், விவேக், தினகரன் மற்றும் அவருடைய மனைவி அனுராதா, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் சொத்துக்களை நிர்வகிப்பது குறித்த ஆலோசனை நடத்தினார்.
இரவு 10 மணியளவில் இருந்து விடிய, விடிய அவர்களுடன் ஆலோசனையை நடத்தினார். இதில் மறுபடியும் சசிகலா பரோல் முடிந்து சிறை சென்ற பிறகு யார் யார் பணத்தை வசூலிக்க வேண்டும், சொத்துகளை யார் யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது. சசிகலா சிறை சென்ற பிறகு பணம் கொடுத்தவர்கள் யாரும் தினகரனிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ள தயங்கினர். இதனால், பணத்தை வசூலிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. தினகரனும் இரட்டை இலை வழக்கில் சிறை சென்று வந்ததால் மீண்டும் அவர் மீது வருமானவரித்துறை சோதனை நடைபெறும் என அச்சப்பட்டு பலர் தினகரனை சந்திக்காமல் தலை தெறித்து ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஆஸ்பத்திரி சென்று கணவர் நடராஜனை சந்தித்தார்.