சிலைகளை விற்ற வழக்கில் கைது டிஎஸ்பி காதர்பாட்சா ஜாமீன் மனு தள்ளுபடி
10/6/2025 2:59:28 PM
கும்பகோணம்: கடந்த 2008 ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரணிபுரத்தில் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து 6 ஐம்பொன் சிலைகளை அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா(57), ஏட்டு சுப்புராஜ் (48) ஆகியோர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வெளியில் விற்பனை செய்துவிட்டனர். இதற்கிடையே காதர்பாட்சா பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு டிஎஸ்பியாகவும், சுப்புராஜ் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தனர். தன்னிடம் பறிமுதல் செய்த சிலைகளை கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை என்பதை அறிந்த ஆரோக்கியராஜ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் புகார்செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி கும்பகோணத்தில் காதர்பாட்சாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் காதர்பாட்சா ஜாமீன் கேட்டு நேற்று கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.