₹20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் காரில் கடத்தல்: விபத்தில் சிக்கியதால் அம்பலம்
10/6/2025 2:58:48 PM
புதுக்கோட்டை: மதுரையிலிருந்து திருச்சி நோக்கி இன்று காலை ஒரு கார் வந்துகொண்டிருந்தது. காலை 6.45மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பைபாஸ் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் கார் திரும்பியபோது எதிரே திருச்சியிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. காரில் வந்த 4 பேர் காயமடைந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் காரை போலீசார் அப்புறப்படுத்தியபோது காருக்குள் மரகதலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரோந்து போலீசார் அளித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் அங்கு வந்து மரகதலிங்கத்தை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி புதுக்கோட்டை மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவரும் விராலிமலைக்கு விரைந்துவந்தார். மரகத லிங்கம் மூன்றரை அடி உயரமும், ஏழரை கிலோ எடையும் கொண்டது. இதன் மதிப்பு ரூ.20கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதை அவர்கள் கடத்தி வந்தபோது விபத்து ஏற்பட்டதால் மரகதலிங்கம் சிக்கியது. மேலும் போலீசார் வழக்கு பதிந்து மரகதலிங்கத்தை கடத்தி வந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், மரகத லிங்கத்தை எங்கிருந்து கடத்தினர், யாருக்காக கொண்டு சென்றனர் என சிகிச்சை பெற்றுவரும் கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.