ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரணை
10/6/2025 2:47:51 PM
புதுடெல்லி: சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி மாநில பாஜ செய்தி தொடர்பாளரும், வக்கீலுமான அஸ்வினி குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல்களில் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 33 வது பிரிவை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டியது கட்டாயம். இதனால் அந்த வேட்பாளரை நம்பி வாக்களித்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதுடன் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது.
2 தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் பிரதமரிடம் வலியுறுத்தினார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர் அந்த தொகுதியில் நடைபெறும் இடை தேர்தல் செலவை ஏற்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்கியது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சுப்ரீம் கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.